மூணாறு: கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் 31,330 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமாகியுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ரூ.1,169 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 31.60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் முழுவதும் கடந்த 6, 7, 8ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதில் மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக வயநாடு, கோழிக்கோடு, காவலப்பரை போன்ற பகுதிகள் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. கனமழையால் கேரளா மாநிலத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த கனமழை மூலம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மண்சரிவு மூலம் மாநிலத்தில் 31,330 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.1,169.3 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரக்கணக்கு வெளியிடப்பட்டுள்ளது.