இமாசலபிரதேசம்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானம் இமாசலபிரதேச மாநிலத்தில் இமயமலையின் ரோஹ்டங் பாஸ் என்ற சிகர பகுதியில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி காணாமல் போனது. இந்த விமானத்தில் பயணம் செய்த வீரர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்றுவந்தது. கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி இதற்காகவே தாகா பனிச்சிகரத்தில் டோக்ரா சாரணர் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த சாரணர் குழுவும், இந்திய விமானப்படையும் இணைந்து கடந்த 6-ம் தேதி மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கியது. 13 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்னர் அந்த விமானத்தின் சில பாகங்களை 5240 மீட்டர் உயரமான தாகா பனிச்சிகரத்தில் இந்த குழுவினர் கண்டுபிடித்தனர்.