மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து 30,000 கனஅடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் 114 அடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது. இதனிடையே, கடந்த சில தினங்களாக காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

 அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம்  உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 112.49 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்றிரவு 114 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 84.29 டி.எம்.சியாக உள்ளது. அதேபோல், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 27 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் நேற்று 11வது நாளாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டது.

Related Stories: