மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது. இதனிடையே, கடந்த சில தினங்களாக காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.