சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவை 2024க்குள் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாகவும், 2032க்குள் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாகவும் உயர்த்தப்போவதாக மத்திய அரசு உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கும் நிலையில், கள நிலையும், யதார்த்தமும் வேறுவிதமாக உள்ளன. இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அப்பட்டமாக அனைவருக்கும் தெரிகிறது.இரு சக்கர வாகனங்களில் தொடங்கி மகிழுந்துகள், பேருந்துகள், சரக்குந்துகள் மற்றும் பல்வகை பயன்பாட்டு வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களின் விற்பனையும் கடந்த 9 முதல் 10 மாதங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் கடந்த சில வாரங்களில் மட்டும் 3 லட்சத்துக்கும் கூடுதலான பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் மேலும் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து நிலவி வருகிறது. இதைப் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.