சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், வாலிநோக்கத்தில் மாரியூர் - வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. 1974ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் உப்பு தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 2,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் 2017 ஏப்ரல் மாதத்தில் வாலிநோக்கத்தில் 5 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் இயந்திரங்கள், 2 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா தொண்டு நிறுவனம் இணைந்து புதிய உற்பத்தி அலகு திறக்கப்பட்டது. மேலும் இரட்டை சுழற்சி செய்யும் இயந்திரம் 75 லட்சத்திற்கு அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கும் உப்பிற்கு நல்ல வரவேற்பும் இருந்தும், வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பதாலும் அரசிற்கு மாதம் ஒன்றிற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.