மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை பட்டப்படிப்புகளில் தமிழ் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மதுரையில் நேற்று காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் முரளி கூறியதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை தமிழ், காந்திய சிந்தனை, உளவியல், தத்துவம் மற்றும் சமயம், மனித உரிமை கல்வி, மகளிரியல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முதுகலை பட்டப்படிப்புகள் இருந்தன. இந்த முதுகலை பட்டப்படிப்புகள் நடப்பாண்டு முதல் நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழ் மொழி பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் வேளையில், முதுகலை தமிழை நிறுத்துவது என்பது எந்தவிதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. அதேபோன்று காந்திய சிந்தனை, தத்துவம் மற்றும் சமயம் போன்ற படிப்புகள் பல மாநிலங்களிலிருந்து அஞ்சல் வழி மூலம் பெறப்பட்டு வந்தன. காந்தியக்கல்வி நீண்டகாலமாக நாட்டில் நல்ல வரவேற்பு பெற்ற கல்வித்திட்டம்.