பவானிசாகர் அருகே ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை: விவசாயிகள் பீதி

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே சிறுத்தை விவசாய தோட்டத்தில் புகுந்து ஆட்டை  அடித்துக் கொன்றதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் அரசப்பன்(55) என்ற கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். அரசப்பன் 3 வெள்ளாடுகளை வைத்து பராமரித்து வந்தார். தினமும் வெள்ளாடுகளை தென்னந்தோப்பில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை  தென்னந்தோப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த வெள்ளாடுகள் வேகமாக ஓடி வந்தன. இதைக்கண்ட அரசப்பன் தென்னந்தோப்பில் சென்று பார்த்தபோது சிறுத்தை ஒரு வெள்ளாட்டை அடித்து கடித்துக்கொண்டிருந்தது.

இதை கண்டு  அரசப்பன் சத்தம் போடவே  வெள்ளாட்டை விட்டுவிட்டு சிறுத்தை தப்பியோடியது. இது குறித்து  பவானிசாகர் வனத்துறையினருக்கு அரசப்பன் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரகர் ஜான்சன் தலைமையிலான  வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். பின்னர் இரவு முழுவதும் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் கூண்டு வைக்கப்பட்டது, ஆனால் கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும்  சிறுத்தை நடமாடுவதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: