புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியின் சிறப்பு சட்டமன்ற கூட்டமானது, நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசு தீர்மானமாக 4 தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிய உள்ளதாக கூறப்பட்டது. அதில், நேற்றையதினம் நீர் மேலாண்மைக்கு நிதி கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது நடத்தப்பட்ட விவாதம் முடிவடைந்து அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் கூட்டத்தொடரில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் முற்றிலுமாக அமல்படுத்தக்கூடாது என்று கூறி, அதனை அரசு தீர்மானமாக நிறைவேற்றக்கோரி முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட 112 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வுக்காக வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம், புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டால், விவாசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும், நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் என்று சட்டப்பேரவையில் பேசினார். எனவே, இந்த திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தக்கூடாது எனக் கூறினார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மசோதாவை தாக்கல் செய்த பிறகு அதற்கான விவாதம் நடைபெற்றது. இந்த, தீர்மானத்திற்கு என்ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல, தமிழகத்தில் இந்த திட்டதை திமுக எதிர்த்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என சட்டப்பேரவையில் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒருமனதாக இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: