சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் பெய்து வரும் கனமழையால் மரங்கள் ஒடிந்து வேறோடு விழுவதாலும், நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் உள்பட 7 மலைக்கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தேயிலை ஏலக்காய், காப்பி, மிளகு விவசாயம் நடந்து வருகிறது. மேகமலை உயிரின வனச்சரணாலயமாக திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதி 2008ம் சுற்றுலாத் தலமாக அரசு அறிவித்ததுடன் நான்கு ஆண்டுகள் கோடை விழாவும் நடத்தப்பட்டது. ஹைவேவிஸ் மலைச்சாலையில் 45 கி.மீ தூரம் குண்டும், குழியுமாக தடுப்பு வேலி மற்றும் பாலங்கள் உடைந்து பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனால் 35க்கும் மேற்பட்ட உயிர்க பலி ஏற்பட்டுள்ளது. இதனால் மலைச்சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக ரூ.80.86 கோடி நிதியில் 35 கி.மீ தூரம் சாலை விரிவாக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தற்போது சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹைவேவிஸில் உள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளையும், ஐந்து அணைகளையும், ஏரிகளையும், தேயிலை தோட்டங்களின் இயற்கை அழகையும் ரசிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.