மருமகனை கொன்ற மாமனார் கைது

பெரம்பூர்:  தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 6வது பிளாக்கில் வசித்தவர் பெருமாள் (45). டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரோஜா (42). இவர்களுக்கு பரத் (13), சரவணன் (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். பெருமாளின் சின்ன மாமனார் ஏழுமலை (52). தண்டையார்பேட்டை, பவர்ஹவுஸ் பகுதியில் வசித்து வருகிறார்.  நேற்று முன்தினம் மாலை ஏழுமலைக்கும் அவரது மகள் ஆனந்திக்கும், தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த பெருமாள் இருவரையும் சமாதானம் செய்துள்ளார். இதனால் பெருமாளுக்கும், ஏழுமலைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளை குத்திவிட்டு தப்பினார். இதில் பெருமாள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெருமாள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைத்து ஏழுமலையை தேடி வந்த நிலையில் மணலி டாஸ்மாக் பாரில் மது அருந்திய ஏழுமலையை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: