கம்பம்: கம்பம் நகராட்சி பெயரில் வீடு தோறும் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கம்பம் நகரில் அடிப்படை வசதிகள் அதிகளவில் செய்யப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் கம்பம் நகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் சென்ற திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்ட தனியார் தொண்டு நிறுவனம், கதவு எண் பொருத்துவதாக கூறி ரூ.50 கட்டாய வசூல் செய்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தட்டிக்கேட்டால் நாங்கள் நகராட்சி அதிகாரிகளின் அனுமதியுடன் தான் வருகிறோம் என்று கூறுகின்றனர். வீட்டின் முன்பக்க கதவிற்கு பக்கத்தில் இந்த கதவு எண் பிளாஸ்டிக் அட்டையை பொருத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனை பொருத்த வேண்டாம் என மக்கள் கூறினாலும் கதவுஎண் அட்டையை பொருத்திவிட்டு செல்வது கடந்த 1 வாரமாக நடக்கிறது. இப்படி அடாவடியாக கதவு எண் பொருத்துவது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால் அப்படி இல்லை என்கின்றனர்.