பாண்டைவையாற்றின் குறுக்கே ராட்ஷச குடிநீர் குழாயில் உடைப்பு... 30 கிராமங்களில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கீழ்வேளூர்: கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடி பாண்டையாற்றின் குறுக்கே ராட்ஷச குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் 30 கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ராட்ஷச குழாய் பூமிக்கடியில் சிமெண்ட் குழாய்கள் புதைக்கப்பட்டும், ஆறு, வாய்க்கால் பகுதியில் இரும்பு குழாய் பதிக்கப்பட்டும் தேவையான இடங்களில் அந்த ராட்ஷச குழாயில் இருந்து பெரிய கீழ் தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நீர் எடுத்து வர மோட்டர் மூலம் நீரை அதிக அழுத்தத்தில் தள்ளப்படுகிறது. இதனால் ராட்ஷச குழாயில் அதிக அழுத்தத்தில் தண்ணீர் செல்லும். கீழ்வேளூரை அடுத்த கிள்ளுக்குடியில் பாண்டைவையாற்றின் குறுக்கே தனியாக பாலம் அமைத்து அதில் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட ராட்ஷச குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் வீணாகி வருகிறது. தற்போது குழாயில் ஏற்பட்ட வெடிப்பு அதிக அழுத்தத்தில் செல்லும் தண்ணீரால் நாளுக்கு நாள் குழாயின் வெடிப்பு அதிகரித்து குழாய் இரண்டாக உடையும் அபாயம் உள்ளது. இதனால் சாட்டியக்குடி, திருக்குவளை, எட்டுக்குடி, தலைஞாயிறு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகல் கிள்ளுக்குடி பாண்டைவையாற்றின் குறுக்கே செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: