அயோத்தி வழக்கு: ஜூலை 25க்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அயோத்தி வழக்கில் 4 வாரத்திற்குள் அதாவது, ஜூலை 25ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமரசக் குழு சரியாக செயல்படவில்லை என இந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, 1992ல் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ஒரு பகுதி ராமர் கோவில் கட்டுவதற்கும், ஒரு பகுதி ராம் லாலா அமைப்புக்கும், மற்றொரு பகுதி சன்னி வக்பு வாரியத்திற்கு என மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மீதமுள்ள பகுதி, ஹிந்து மத அமைப்பான, நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருத்தது. இதை எதிர்த்து, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில், அயோத்தி வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான, கோபால் சிங் விஷாரத் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்த மனு என்னவென்றால், அயோத்தி வழக்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த வழக்கில் சுமூக தீர்வு காண, மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும்ஏற்படவில்லை. அதனால், அயோத்தி வழக்கை உடனடியாக விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நேர்மறையான முடிவை அளிக்க மத்தியஸ்த குழு அறிக்கை தராததால், வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றார் என மூத்த வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது. முஸ்லிம் அமைப்புகள் தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான், மத்தியஸ்த குழுவை விமர்சிக்க இது சரியான நேரம் அல்ல என்று பதில் வாதமிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சமரசக் குழு அறிக்கை தக்கலை செய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்றும், ஜூலை 25ம் தேதிக்குள் அயோத்தி விவாகரம் தொடர்பாக சமரக்குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டனர்.

Related Stories: