புழல்: புழல் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 22, 23, 24 மற்றும் 25வது வார்டுக்கு உட்பட்ட புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், லட்சுமிபுரம், சூரப்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த வார்டுகளில் சிறிய அளவிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு, அதிலிருந்து பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட இந்த தொட்டிகள் தற்போது, சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இவற்றை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்பேரில், புழல் மகளிர் சிறைச்சாலை அருகே, கண்ணப்பசாமி நகர், கதிர்வேடு எம்ஜிஆர் நகர், லட்சுமிபுரம் வில்லிவாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கு குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்ததது. இதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.