ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கால்நடைகளுடன் வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று கால்நடைகளுடன் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம்  அழிவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று விவசாயிகள், பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் இதுபற்றி தமிழக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது.

எனவே, இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரகசிய ஆதரவு அளிக்கிறதோ என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் மீது விவசாயிகள், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே மத்திய, மாநில  அரசுகளை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 6, 7, 8 ஆகிய தேதிகளில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ைஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக டெல்டாவில்  விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மீண்டும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் சில நாட்களுக்கு முன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கால்நடைகளுடன் ஜூன் 22ம் தேதி (இன்று)  வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை கொத்தமங்கலம் ஊராட்சி பள்ளங்கோவில் சுமை தாங்கி என்ற இடத்தில் போராட்டக்குழு தலைவர் தியாகராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது.  போராட்டக்குழு செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் தங்கராசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  அனைவரும் அந்த பகுதியில் உள்ள வயலில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் ஆடு, மாடுகளையும் அழைத்து வந்து அவற்றின் கழுத்தில் திட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி தொங்க  விட்டிருந்தனர்.

Related Stories: