பெரம்பூர்: இந்திய குடியரசு கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் கடந்த 2016ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு சில நிபந்தனைகளுடன் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சியில் தன்னை நீக்கியதற்கு முக்கிய காரணம் மாநில துணை தலைவரான ரவி என்று நினைத்த கிருஷ்ணகுமார், தனது ஆதரவாளர்களான ஆனந்த் மற்றும் ஆனந்தகுமாருடன் நேற்று முன்தினம் ரவியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவி மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் (43), புளியந்தோப்பு குருசாமி தெருவை சேர்ந்த ஆனந்த் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.