கொடைக்கானல்: கொடைக்கானலில் பேரிக்காய் அறுவடை துவங்கியுள்ளது. இந்தாண்டு விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேரி எனப்படுவது தாவர பேரினத்தில் உள்ள உண்ணத்தக்க ஒரு பழத்தினை குறிக்கும் சொல்லாகும். சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பேரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்தியா, இலங்கையில் ஒரு சில மலைப் பிரதேசங்களிலும், இந்தோனிசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளில் மொத்தம் 30 வகையான பேரிகள் பயிரிடப்படுகிறது. மிதமான தட்பவெப்பம், குளிரான பகுதிகளில் இப்பழம் நல்ல விளைச்சலை கொடுக்கும். கொடைக்கானல் அருகே செண்பகனூர், அப்சர்வேட்டரி, வட்டக்கானல், வில்பட்டி, பெரும்பள்ளம், அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, அட்டக்கடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சுமார் 3000 ஹெக்டேர் பரப்பளவில் பேரி பயிரிடப்படுகிறது. நாட்டுப் பேரி, முள்பேரி, தண்ணீர் பேரி, ஊட்டி பேரி, வால்பேரி போன்ற வகைகளை வளர்த்து வருகின்றனர்.