காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறையால், தனியார் பள்ளி, திடீரென அரை நாள் விடுமுறை அறிவித்தது. இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, அப்பள்ளியில் ஆய்வு செய்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் பிஎஸ்கே தெருவில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்படுகிறது. இங்கு 1 முதல் 10ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது, தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், தனியார் பள்ளியையும் விட்டு வைக்கவில்லை. 2 நகராட்சி குடிநீர் இணைப்புகள், 2 நிலத்தடி போர் இருந்தும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குடிநீர் பற்றாக்குறை காரணமாக, பள்ளி நிர்வாகம் சார்பில் 1 முதல் 5ம் வகுப்புவரை காலை மட்டும் பள்ளி செயல்படும். பிற்பகல் விடுமுறை என கூறி, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. பள்ளி கல்வி துறை அதிகாரிகளின் எவ்வித உத்தரவும் இல்லாமல், தனியார் பள்ளிக்கு அரைநாள் விடுப்பு அளித்ததை அறிந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.