ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு ஊர்மக்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு களி விருந்து கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் வறட்சி ஏற்பட்டு ஏரிகள் வறண்டு நீர் ஆதாரங்கள் முற்றிலும் வற்றிவிட்டது. இதனால், விவசாயம் கேள்விக்குறியானதுடன், பல பகுதிகளிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வெள்ளக்குட்டையில் குடிநீர் பஞ்சத்தால் தவித்த மக்கள், கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்று எண்ணினர்.