மஞ்சூர்: கெத்தை வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயில் 30 ஏக்கரில் மரங்கள், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வந்தது. இதன் தாக்கத்தால் மஞ்சூர் சுற்றுப்புறங்களில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பில் மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகி வருகிறது. கடந்த வாரத்தில் சில தினங்கள் மட்டும் தென்மேற்கு பருவமழை பெய்தது. பெரிய அளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாரல் மழையே நீடித்ததால், மீண்டும் சமவெளி பகுதிகளைபோல் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மஞ்சூர் கெத்தை சாலையில் உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.