சென்னை: உடநலக்குறைவால் திமுக எம்எல்ஏ ராதாமணி கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து 6 மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் ராதாமணி (திமுக). இவர், உடநலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (14ம் தேதி) காலை மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கும் கடிதம் மூலம் நேற்று தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த கடிதத்தை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார்.விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 6 மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கு இடைத்தேர்தலை அறிவிக்கும்.