காவலர் குடியிருப்பில் துணிகரம் எஸ்ஐ வீட்டில் 13 சவரன் கொள்ளை

சென்னை: மாதவரம் காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பின் முதல் மாடியில் வசித்து வருபவர் கோதண்டபாணி (52). செம்பியத்தில்  போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்,  கடந்த 13ம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று, அங்கிருந்து நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது இவரது வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 13 சவரன் நகை, ₹2 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

*  திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த பூ வியாபாரி தேவி (39) என்பவர், நேற்று மீன் மார்க்கெட் சென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரிடம் இருந்த ₹7 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

* பெருங்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவன் ரவி (20), நேற்று மேடவாக்கம் அருகே பைக்கில் சென்றபோது, சிமென்ட் கலவை ஏற்றிவந்த லாரி மோதி இறந்தார்.

*   சூளை, குறவன் குளம் 3வது தெருவை சேர்ந்த வழக்கறிஞர் நரேஷ்குமார் (35) என்பவரை தாக்கி, பீர் பாட்டிலால் குத்த முயன்ற அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிஷோர் குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த மனோகரன் (40) என்பவர் குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

*  கொரட்டூர் மாதானங்குப்பம் நேதாஜி தெருவை சேர்ந்த செல்வி (32) என்பவர் வீட்டின் அருகே நடந்து சென்றபோது, அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை பைக் ஆசாமிகள் பறித்துக்கொண்டு தப்பினர்.

* புது பெருங்களத்தூர் பெரியார் நகரை சேர்ந்த பிரகதீஸ் (29) என்பவரை முன்விரோத தகராறில் தாக்கி, பீர் பாட்டிலால் குத்திய, பழைய பெருங்களத்தூர், ஆகதிஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த பரத் (21), ராஜீ நகரை சேர்ந்த பாலாஜி (25), காமராஜர் பிரதான சாலை, 3வது குறுக்கு தெருவை சேர்ந்த வினோத்குமார் (26), சபீர் பாட்ஷா (25), ராஜராஜேஸ்வரி நகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்த சுதேஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

4 பேருக்கு குண்டாஸ்

சென்னையில் தொடர் குற்றச் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்த திருவெற்றியூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த உமர்பாஷா  (29), சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சரஸ்வதி வாசகி தெருவை சேர்ந்த  பாண்டியன் (34), குன்றத்தூர் நத்தம் மலையடிவாரம் பகுதியை சேர்ந்த ரூபன்  (24), திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அந்தோணி நகரை சேர்ந்த ஐசக் (29)  ஆகிய 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோவில் வாலிபர் கைது

வேளச்சேரி, எல்.ஐ.சி. நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி,  சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் யுவராஜை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: