சென்னை: தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமாகா மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், கத்திப்பாரா ஜனார்த்தனன், விடியல் சேகர், என்டிஎஸ்.சார்லஸ், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ரயில்வே ஞானசேகரன், முனவர் பாட்ஷா, மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, விக்டரி மனோகரன் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.பின்னர் கூட்டத்தில், நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்த கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.