திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மாவேலிக்கரை அருகே நடுரோட்டில் பெண் போலீஸ் ஏட்டை போக்குவரத்து போலீஸ்காரர் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள காஞ்ஞிப்புழா பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா புஷ்பாகரன்(33). வள்ளிகுந்நம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தார். இவரது கணவர் சஜீவ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. போலீஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் இவர்களது வீடு உள்ளது.இந்நிலையில் நேற்று பகல் 2.30 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற சவுமியா, பின்னர் பொருட்கள் வாங்க 3.30 மணிக்கு ஸ்கூட்டரில் கடைக்கு சென்றார். அப்போது காரில் வந்த ஒரு வாலிபர் சவுமியாவின் ஸ்கூட்டர் மீது மோதினார். இதில் சவுமியா தடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய வாலிபர் கத்தியால் சவுமியாவை சரமாரியாக குத்தினார். சவுமியா தப்பி ஓட முயல்வதற்குள் அவர் மீது ெபட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் சம்பவ இடத்தில் சவுமியா உடல் கருகி இறந்தார். வாலிபருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.