பழநி : பழநியில் வீடுகளை விடுதிகளாக மாற்றுவது அதிகரிப்பதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, நவராத்திரி என வருடம் முழுவதும் திருவிழா இருந்து கொண்டே இருக்கும். இதனால் பழநி நகருக்கு அநேக நாட்களும் பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்கு அடிவார பகுதியில் லாட்ஜ்கள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை பார்த்த சிலர் தற்போது தங்களது வீடுகளை லாட்ஜ்களாக மாற்றி உள்ளனர். காற்றோட்டமில்லாமல், அவசரகால வெளியேறும் வழி போன்ற போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலர் உரிய தகுதிச் சான்றிதழும் பெறவில்லை.