தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்திப்பட்டியை சேர்ந்த சிரஞ்சீவி காவலராக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவர் தேவதானப்பட்டி சரகத்திற்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவரை மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சிரஞ்சீவி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரை தாக்கிய மர்மநபர்களை கண்டு பிடித்து கைது செய்ய கோரி சருத்திப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தேனி - திண்டுக்கல் பகுதியில் நேற்றிரவு மறியலில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை களைந்து செல்லும்படி கூறியுள்ளனர்.