கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறையில் கூட்டம் நிரம்பி வழியும். கோடை சீசன் முடிந்த பின்னர் வடமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சூறைகாற்றுடன் மழை தொடர்ந்து பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று தடங்கல் ஏற்பட்டு வருகிறது. கன்னியாகுமரியிலும் மழை பெய்வதால் வடமாநில சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. இதனால் கடற்கரை, சன்னதி தெரு உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தரக்குறைவாக பேசும் வியாபாரிகள் கன்னியாகுமரிக்கு வடமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் இங்குள்ள மக்கள் மற்றும் வியாபாரிகள் பேசுவதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி சில வியாபாரிகள் வடமாநில சுற்றுலா பயணிகளை மிகவும் தரக்குறைவாக பேசுகின்றனர்.