திருமங்கலம்: விருதுநகர் மெயின் ரோட்டில் குண்டாற்றின் மீது அமைந்துள்ள ஆறுகண்பாலம் சேதமடைந்து பலவீனமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்aசமடைந்துள்ளனர். திருமங்கலம் நகரிலிருந்து விருதுநகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது ஆறுகண்பாலம். நகரின் வழியாக செல்லும் குண்டாறு பாலத்தின் மீது அமைந்துள்ள இந்த குறுகலான பாலம்தான் திருமங்கலம் நகரையும், தென்மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய பாலமாக திகழ்கிறது.
மழைக்காலங்களில் குண்டாற்றில் ஓடும் தண்ணீர் பாலத்தை கடந்து செல்ல ஆறுகண் கொண்டு அமைக்கப்பட்டதால் இது ஆறுகண் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்த பாலத்தை கடந்தவுடன் தான் விருதுநகர் மற்றும் ராஜபாளையம் சாலைகள் பிரிக்கின்றன. திருமங்கலத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் உரிய பராமரிப்பு இன்றி சிதைவடைந்து காணப்படுகிறது. பாலத்தின் உள்புறத்தில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து காரைகள் தெரிகின்றன.