மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மண் நிலை தன்மையுடன் இருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை அளித்துள்ளன. 6 மாடி அளவுக்கு கட்டிடம் கட்டலாம் என்றும் நாக்பூர் ஆய்வு மையம் சான்றிதழ் அளித்துள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், 4 மாதங்களுக்கு மேலாகியும் எந்த பணியும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், 48 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து மண்ணின் உறுதி தன்மையை கண்டறிய திருவனந்தபுரத்தை சேர்ந்த வல்லுநர்கள் மண் மாதிரியை கடந்த நவம்பர் மாதம் எடுத்துச் சென்றனர். மேலும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட மண் மாதிரி நாக்பூரில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.