புதுச்சேரி: கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலில் 17 பேர் இறந்துள்ள நிலையில், மீண்டும் அங்கு நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகம், புதுச்சேரியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளது. கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனையில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டி புதுச்சேரி மாநிலத்தின் மாகே பிராந்திய பகுதி அமைந்திருப்பதால் அங்கு மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.