வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோவும் எடுத்து மிரட்டிய கும்பல்

போடி: வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய தனியார் வங்கி மேலாளர் உட்பட 2 பேர் போடி அருகே கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே சங்கராபுரம் 16வது வார்டை சேர்ந்தவர் கலா (28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் கேரளாவில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் அனுப்பும் பணத்தை எடுக்க இப்பகுதியிலுள்ள தனியார் வங்கிக்கு கலா அடிக்கடி சென்று வந்தார். அந்த வங்கியில் போடி தென்றல் நகரை சேர்ந்த முத்து சிவகார்த்திகேயன் (30) மேலாளராக உள்ளார். இவர், பி.காம் பட்டதாரியான கலாவுக்கு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். கம்பத்திலுள்ள ஒரு ஓட்டலில் வங்கி உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். அங்கு அவர்களை பார்த்து பேசினால் வேலை உறுதி என்று கூறி கலாவை, முத்து சிவகார்த்திகேயன் கடந்த 2018, ஆக. 22ம் தேதி அழைத்து சென்றார். அங்கு ஓட்டலில் வைத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து, அதை அடிக்கடி காட்டி மிரட்டி அவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

மேலும் முத்து சிவகார்த்திகேயனின் நண்பர்கள் அன்பு, சதீஷ், பாண்டி, ராஜபார்த்தீபன், ஈஸ்வரன் உட்பட 10 பேர், கலாவை மிரட்டி கம்பம், தேக்கடி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த கும்பலில் இருந்து தப்பிக்க, வீட்டை காலி செய்து விட்டு கலா, தேவாரத்தில் குடியேறினார். இருப்பினும் விடாமல் துரத்திய அந்த கும்பல் அடிக்கடி போனில் அவரை அழைத்து மிரட்டி வந்தது. இதுகுறித்து போடி போலீசில் கலா புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தனது கணவரோடு சென்று தேனி எஸ்பி பாஸ்கரனை சந்தித்து, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் செய்து கதறியழுதார். இதுதொடர்பாக உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போடி போலீசாருக்கு, எஸ்பி உத்தரவிட்டார்.  அவரின் உத்தரவின் பேரில் போடி புறநகர் போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் முத்து சிவகார்த்திகேயன், அவரது நண்பர் ஈஸ்வரனை நேற்று கைது செய்தனர். இந்த பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 10 பேரை தேடி வருகின்றனர். வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி, இளம்பெண்ணை வங்கி மேலாளர் அவரது நண்பர்கள் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: