வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் தப்பி பிழைத்த முந்திரி மரங்கள் தற்போது காய்க்க துவங்கி உள்ளது. போதுமான அளவு உற்பத்தி இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வேதாரண்யம் தாலுகா முழுவதும் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் முந்திரி மரங்கள் பெரும்பாலானவை சாய்ந்தது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள பணபயிர்களான மா, தென்னை, முந்திரி, சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருமானத்திற்கு வழி இல்லாத நிலையில் உள்ளனர். வேதாரண்யம் தாலுகாவில் செட்டிபுலம், கரியாப்பட்டினம், வெள்ளப்பள்ளம், செம்போடை, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகளின் ஆண்டு வருமானத்திற்கு முந்திரி ஒரு முக்கிய காரணமாகும். கஜா புயலால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த முந்திரி மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டது. புயலில் தப்பிய சில மரங்கள் தற்போது காய்க்க துவங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.