சோழவந்தான்: சோழவந்தான் ரயில்வே கேட்டில் மேலே உள்ள ராட்சத தேனீக்கள் பொதுமக்களை விரட்டி விரட்டிக் கொட்டுவதால் தினமும் அலறி ஓடும் நிலை தொடர்கிறது. சோழவந்தானில் வாடிப்பட்டி சாலையில் ரயில்வே கேட் உள்ளது. ரயில்வே மேம்பால பணிகளுக்காக கனரக வாகனங்களை தவிர டூவீலர், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் இவ்வழியே சென்று வருகிறன. தினமும் அறுபதுக்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே சென்று வருகிறது.
இந்நிலையில் வடக்குப் பகுதி ரயில்வே கேட்டின் மேலே உள்ள இணைப்பு பாலத்தின் கீழ் பகுதியில் சில மாதங்களாக ராட்சத தேனீக்கள் பெரிய கூடு கட்டியுள்ளது. மற்ற நேரத்தில் அமைதியாக இருக்கும் இந்த தேனீக்கள்,அதிவேகத்தில் ரயில் செல்லும் போது அதிர்வினால் கலைந்து ரயில்வே கேட்டில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை விரட்டிக் கொட்டுகிறது. இதனால் கேட் மூடிய போது நீண்ட வரிசையில் நெரிசலில் காத்திருக்கும் பொதுமக்கள், குழந்தைகள் தப்பி ஓட வழியின்றி தேனீக்களின் தாக்குதலால் அலறித் துடிக்கின்றனர்.