200 நாடுகளின் கரன்சிகளை சேகரித்து வாலிபர் சாதனை

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை டேனிஷ் மிஷன் தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன்ராஜூ (40). பட்டதாரி வாலிபரான இவர் கடந்த 20 வருடத்துக்கு மேல் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைத்துள்ளார். இதுகுறித்து ரங்கநாதன்ராஜூ கூறுகையில், ``7ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பழைய கரன்சிகள், நாணயங்களை சேகரிக்கும் பணியை துவங்கினேன். கடந்த 25 ஆண்டுகளில் இதுவரையில் ஆப்கானிஸ்தான், அல்மேனியா, பொலிரியா, போஸ்வானனா, கியூபா, நார்வே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மன்,

செக்கஸ்லோவியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளின் ரூபாய் நோட்டுகள் மற்றும் இந்தியாவில் மன்னர்கால நாணயங்கள், சுதந்திரம் அடைவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், அதன் பிறகு வந்த காகித ரூபாய் நோட்டுகள் 18ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், 1847ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் புழக்கத்தில் இருந்த கரன்சிகள் சேகரித்து வைத்துள்ளேன். கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற உலக அளவிலான நாணயங்கள் மற்றும் கரன்சி கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் கரன்சிகள் மற்றும் நாணயங்களை பாதுகாத்து வைத்து இருந்ததற்காக நோபல் அமைப்பின் சார்பில் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விரைவில் கின்னஸ் சாதனை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்`` என்றார்.

Related Stories: