ராமேஸ்வரம்: பாம்பன் முந்தல்முனை கடற்கரை பகுதியில் மன்னார் வளைகுடா கடலில் அலைகளுடன் நேற்று ஏராளமான நட்சத்திர மீன்கள் கரையோரத்திற்கு வந்து சென்றதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பாகவும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. இதனால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் பல ஆழ்கடல் பகுதியில் இருந்து கடல் நீர் மேலோட்டமான பகுதிக்கு வந்து செல்கின்றன. சில நாட்களாக பாம்பன் குந்துகால் கடல்பகுதியில் பகல் நேரத்திலேயே அதிகளவில் டால்பின் மீன்கள் நீந்தி குதிக்கும் காட்சியை அவ்வப்போது காணமுடிகிறது. இந்த நிலையில், பாம்பன் முந்தல்முனை கடலோர பகுதியில் நேற்று ஏராளமான நட்சத்திர மீன்கள் காணப்பட்டது. இவற்றில் சில அலைகளுடன் சேர்ந்து கடற்கரை பகுதிக்கும் வந்தன. இவற்றை சுற்றுலாப்பயணிகள் ஆர்வமாக ரசித்து, போட்டோ எடுத்துக் கொண்டனர். தடிமனான முட்களுடன் கூடிய சரியான ஐந்து சமச்சீர் ஆரக்கால்களுடன் ஐங்கோண வடிவத்தில் இருக்கும் நட்சத்திர மீன்களில் பல வகை உள்ளது. கடலில் காணப்படும் மெல்லுடலிகளே இதன் உணவாகும். சிறிய மீன்களையும் உணவாக இவை உட்கொள்ளும்.