கூடலூர்: பெரியாறு அணையில் ஆய்வு செய்த கண்காணிப்பு குழு தலைவர், ஆய்வுக்குப்பின் அணை பலமாக உள்ளதாக தெரிவித்தார். பெரியாறு அணை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். முன்னதாக குழு தலைவர் குல்சன்ராஜ், தமிழக பிரதிநிதி பிரபாகரன் தமிழக அதிகாரிகளுடன் வல்லக்கடவு வனப்பகுதி வழியாக ஜீப்பில் அணைப்பகுதிக்கு வந்தனர். கேரள பிரதிநிதி அசோக், கேரள அதிகாரிகளுடன் தேக்கடியிலிருந்து கேரள வனத்துறை படகு மூலம் அணைக்கு வந்தார். பின் மெயின் அணை, பேபி டேம், கேலரிப்பகுதி, மதகுப்பகுதியை ஆய்வு செய்தனர். கேரள அதிகாரிகளின் வேண்டுகோளின்படி மதகுப்பகுதியில் முதல் மதகு இயக்கி சோதனை செய்யப்பட்டது. அதில் அதன் இயக்கம் சீராக இருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து அணையின் நீர் கசிவையும் சோதனை செய்தனர். இந்த ஆய்வின்போது முதன்மை பொறியாளர் கிருஷ்ணன், காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியன், துணைக்குழு தலைவர் சரவணபிரபு, பெரியாறு அணை செயற்பொறியாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் இருந்தனர்.