பத்லாப்பூர்: மகளின் திருமணத்துக்காக 860 மரங்களை வெட்டிய தந்தைக்கு, நான்கு மாதத்துக்குள் இருமடங்கு மரங்களை நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் தஸ்ரத் கர்குடே. தனது மகளின் திருமண செலவுக்காகவும், மேடை அமைப்பதற்காகவும் வீட்டின் அருகே தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 860 மரங்களை வனத்துறை அனுமதியின்றி வெட்டி விற்றுவிட்டார். இது குறித்து தெரிந்ததும் வனத்துறை அதிகாரிகள், தஸ்ரத்திடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். பிறகு, மரங்களை வெட்டிய அதே நிலத்தில் அடுத்த நான்கு மாதத்துக்குள் இரண்டு மடங்கு மரங்களை நட வேண்டும். அல்லது புதிய மரங்களுக்கான தொகையை வனத்துறையிடம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.