திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதி தெருவில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பல தரப்பினரும் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். பலர் தங்கள் நகைகளையும் அடமானம் வைத்துள்ளனர். வங்கியில் மாதத்திற்கு இருமுறை அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்நிலையில், கடந்த வாரம் அடகு வைத்த நகையை மீட்க ஒருவர் வந்தபோது, அவரது நகை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தொடர்ந்து மற்ற நகைகள் குறித்தும் ஆய்வு செய்தபோது ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது தெரியவந்துள்ளது. 42 வாடிக்கையாளர்களின் நகைகளான அவை சுமார் 750 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.