ஈரோடு: காற்று, மழையால் மின் கம்பங்களில் தென்னை மட்டை விழுந்து மின்தடை ஏற்படுகிறது. இதனை சில மணிநேரத்துக்குள் ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்’ என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்திருக்கிறார். ஈரோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை மின் மிகை மாநிலமாக வைத்துள்ளோம்.தற்போது தேவைக்கு அதிகமாக காற்றாலை மின்சாரம், கூடங்குளம் அணு மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கதவணை மூலம் மின் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பல பகுதிகளில் காற்று, மழை பெய்து வருகிறது. இதனால், மின் கம்பங்களில் தென்ன மட்டை விழுந்து மின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மரங்கள், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அங்கு மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் ஊழியர்கள் சென்று சரி செய்வதற்கு 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது. இந்த செய்தியைதான் மின் வெட்டு என கூறுகின்றனர். எனினும் மின் தடை ஏற்படும் பகுதியில் இரவு நேரத்திலும் மின் ஊழியர்கள் பணியாற்றி சரி செய்து வருகின்றனர்.