வேளச்சேரி: சென்னை மாநகராட்சி 189, 190வது வார்டுக்குட்பட்ட பள்ளிக்கரணையில், துலுக்காணத்தம்மன் கோயில் தெரு மற்றும் அதில் அடங்கிய 1 முதல் 19 தெருக்கள், பெரியார் நகர், ஆதி சாமி நகர், காமகோடி நகர், ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேளச்சேரி, பெரும்பாக்கம் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இந்த பகுதியில் இரவு நேரத்தில் 11 மணிக்கு மேல் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. சில நேரம் 5 மணி நேரம் வரை கூட தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் தற்போதுள்ள கோடை வெயிலுக்கு காற்றோட்டம் இல்லாமல் மக்கள் புழுக்கத்தில் தூக்கத்தை தொலைத்து அவதிக்குள்ளாகின்றனர்.