திருத்துறைப்பூண்டி: வரும் 10ம் தேதி பூம்புகாரில் கல்லெடுத்து 12ம் தேதி ராசிமணலில் அணை கட்டும் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கச்சனத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் ஒன்றிய சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: காவிரியில் மேட்டூர் அணை நிரம்பியபிறகு உபரிநீர் கடலில் கலப்பதை தடுத்து ஒகேனக்கல்லுக்கு மேலே ராசிமணலில் அணை கட்டி தண்ணீரை தேக்கி மேட்டூர் அணைமூலம் பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் காமராஜர் தனது ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டினார்.