மும்பை: அமராவதி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்லும் நடிகை நவ்நீத் கவுர், இனி தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் கடந்த 2011ம் ஆண்டு மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான ரவி ரானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரவி ரானா ‘யுவா சுவாபிமாண் பக்ஷ’ என்ற தனிக்கட்சியை நடத்தி வருகிறார்.இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான உறவில் உள்ளார். அந்த கட்சியின் ஆதரவுடன் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமராவதி மாவட்டத்தில் உள்ள பட்நேரா சட்டப்பேரவைத் தொகுதியில் ரவி ரானா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தனது மனைவி நவ்நீத்தையும் அரசியலில் களமிறக்க அவர் முடிவு செய்தார். அவருக்காக தேசியவாத காங்கிரசிடம் பேசி அமராவதி மக்களவைத் தொகுதியை ரவி ரானா பெற்றார். அந்த தொகுதியில் தேசியவாத காங்கிரசின் ஆதரவுடன் போட்டியிட்ட நவ்நீத் 5,10,947 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் ஆனந்த்ராவ் அட்சுல் 4,73,996 வாக்குகள் பெற்றார்.