சென்னை: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்? என பாஜக செய்தித் தொடர்பாளர் தி.நாராயணன் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற 17வது மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் அமோக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேக உள்ளார். நாளை நடைபெற உள்ள இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு அதிபர்கள் மற்றும் திரையுலக நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நட்பு ரீதியின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பாஜக வட்டாரத்தில் தகவல் வெளியானது.