கொல்கத்தா: தேர்தல் முடிவுக்க பின் முதன்முதலாக கவிதை தொகுப்பு ஒன்றை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜ கட்சியை மறைமுகமாக சாடி வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகளுக்கிடையே போட்டி இருந்த நிலையில், இன்று பாஜ கட்சி இடதுசாரிகளின் இடத்தை பிடித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும், பாஜ கட்சி 18 இடங்களையும், மற்றவை ஓரிடமும் கைப்பற்றியது. இந்த தேர்தல் முடிவுகள் மேற்கு வங்க அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியான பின்னர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கவிதை தொகுப்பு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘மதவாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆக்கிரமிப்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய இரண்டுமே ஒவ்வொரு மதத்திலும் இருக்கிறது. வங்காளத்தில் மறுமலர்ச்சி உதிப்பதற்கான சேவை புரியவே நான் இருக்கிறேன். மத ஆக்கிரமிப்புகளை விற்பனை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்ற ஒரு கவிதையை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த தொகுப்பினை ‘ஐ டோண்ட் அக்ரி’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதால், அது, பாஜ கட்சியின் வெற்றியை ஏற்க மம்தா பானர்ஜி மறுக்கும்படி அமைந்துள்ளது. இந்த கவிதை தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.