சென்னை: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ ஒன்றில் கூட வரவில்லை. இதனால், தமிழக பாஜ தலைவராக உள்ள தமிழிசையின் பதவியை பறிக்க அக்கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பாஜ தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர். தமிழகத்தில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜ தலைமை 5 வேட்பாளர்களுக்கும் கடும் நெருக்கடியை கொடுத்து வந்தது. இதனால் மிகவும் பிரபலமானவர்களையே வேட்பாளர்களாகவும் நிறுத்தியது. கட்சி தலைமையின் கடும் நெருக்கடியை தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களுடைய தொகுதிகளில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தை மேற்கொண்டனர். வேட்பாளர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற வாசகத்தையே முன்மொழிந்து வந்தனர். குறிப்பாக, பிரதமர் மோடியும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்தும் தமிழகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டார்.