சென்னை: கோயில் சொத்து ஆவணங்கள் மாயமான விவகாரத்தை தொடர்ந்து அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் 16 இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்படவுள்ளது என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அறநிலையத்துறை நிர்வாகம், பணியாளர் அமைப்பு, சமய நிறுவனங்களில் அசையும், அசையா சொத்துக்கள் மேலாண்மை, திருப்பணி, வழக்குகள், தணிக்கை போன்ற செயல்பாடுகளில் ஆணையருக்கு உதவியாக 3 கூடுதல் ஆணையர், 7 இணை ஆணையர், 2 உதவி ஆணையர் உட்பட 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிகின்றனர். இந்த அலுவலகத்தில் ஆவண பாதுகாப்பு அறை உள்ளது. இதில், ஒவ்வொரு கோயில்களின் வருவாய், செலவின தொடர்பாக கணக்கு பதிவேடுகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவண அறையில் சமீபத்தில் ஆவணங்கள் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்யும் போது காணாமல் போனது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஆவணங்களை தேடி கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் யார் எடுத்து சென்றார்கள் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.