மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ளது பரளிகாடு. சுற்றிலும் மலைகள் சூழ பச்சை பசேல் என இயற்கை எழில் கொஞ்சும் வனங்களின் நடுவே பில்லூர் அணையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் வனத்துறை சார்பில் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. இவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இப்பகுதிக்கு சுற்றுலா செல்ல வனத்துறையினரின் அனுமதி பெறுவது கட்டாயமாகும். பரளிகாட்டில் ஓடும் ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்காக பரிசல் சவாரி நடத்தப்படுகிறது. பரிசலுக்கு 4 பேர் வீதம் பயணிக்கலாம். இதை தொடர்ந்து அரை மணி நேரம் ஆற்றில் பரவசத்துடன் பயணித்து அக்கரையில் கொண்டு சென்று பயணிகள் இறக்கி விடப்படுவார்கள். அங்கு காடுகளின் அழகை வனத்துறையினரின் உதவியோடு சுற்றி பார்க்கலாம். அவ்வப்போது மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் தென்படும். அரை மணி நேர இடைவெளிக்கு பின் மீண்டும் பரிசல் பயணம் தொடரும். இதை தொடர்ந்து 4 கி.மீ பரிசல் சவாரி முடிந்து கரைக்கு வந்தவுடன் பழங்குடியினர் மகளிர் குழுக்கள் மூலம் நடத்தப்படும். சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மேலும், ஆற்றில் குளியல், டிரக்கிங், மரங்களில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவது என பல்வேறு அம்சங்கள் உள்ளன.