சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் சதி : கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நேற்று மாலை தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், மத்திய, மாநில அரசுகள் மீது கடும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய, மாநில அரசுகள். மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர, தடை செய்ய முடியாது. 12  ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘‘இந்து’’ என்ற மதக்குறிப்பு  சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆளவந்தாராலோ ‘‘இந்து’’ என்று  நாமகரணம் செய்யப்பட்டோம்.

ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர், அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென்று பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘‘பெயராக’’, ‘‘மதமாக’’க் கொள்வது எத்தகைய அறியாமை. நாம் ‘‘இந்தியர்’’ என்ற அடையாளம் சமீபத்தியதுதான் எனினும், காலம் கடந்து வாழக்கூடியது. நாம் நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக,  அரசியல் மற்றும் ஆன்மிக ரீதியாகவும் பிழையான தேர்வாகும். புரியலன்ற சோமாறிகளுக்கு, ‘‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கிறோம். ‘‘கோடி’’ன்ன உடனே ‘‘பணம்’’ ஞாபகம் வந்தால் நீ  தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல, வெறும் வியாதி. ‘‘தமிழா’’, நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: