திருவில்லிபுத்தூர்: கமல்ஹாசன் பேச்சுக்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து’ என பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் கூறியிருப்பதாவது:
கமல் பேசியது கண்டிக்கத்தக்கது. எங்கு பார்த்தாலும் இந்து மதத்தையும், இந்து மத கடவுள்களையும் இதுபோல் பேசி வருகின்றார். கமல் பேசியுள்ளது உலகத்தில் உள்ள அனைத்து இந்து மக்களையும் சொல்வதைப்போல் உள்ளது. அவர் மேடையில் பேசும்போது எப்படி பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். இந்து மக்கள் அனைவரும் விழித்தெழுந்து இதுபோல் பேசுபவர்களை பேச விடாமல் செய்ய வேண்டும் என்றார்.