வன்முறை எதிரொலி...... மேற்குவங்கத்தில் நாளையுடன் பிரச்சாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: மேற்குவங்கத்தில் வன்முறையை அடுத்து அரசியல் கட்சிகள் நாளை இரவுடன் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாட்டு விதித்துள்ளது. கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே கடும் வன்முறை ஏற்பட்டது.  அப்போது தத்துவ மேதை வித்யாசாகரின்  சிலையும் உடைக்கப்பட்டது.  சிலையை உடைத்தது குறித்து ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம் சாட்டுகின்றனர்.

தேர்தல் தொடங்கியதில் இருந்து பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. நேற்றைய வன்முறையை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

 

மேற்குவங்கத்தில் 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலில் 9 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கு பிரசாரம் 17-ம் தேதியுடன் முடியும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வன்முறை காரணமாக நாளை 16-ம் தேதி இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வித்யாசாகரின் சிலை சேதம் செய்யப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. மாநில அரசால் குண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: